தொலைக்காட்சி

maandag 23 januari 2012

தமிழ் மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக திறந்த மனதுடன் பேசத் தயார்!- சி.சந்திரகாந்தன் சம்பந்தனுக்கு கடிதம்

தமிழ் மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக திறந்த மனதுடன் பேசத் தயார்!- சி.சந்திரகாந்தன் சம்பந்தனுக்கு கடிதம்
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 01:11.27 AM GMT ]
அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்காக மாகாணசபை முறையையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் வலியுறுத்துவீர்களாயின் அது தொடர்பில் கூட்டமைப்புடன் திறந்த மனதுடன் பேசுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதுடன்,
பேச்சுவார்த்தைக்கான பகிரங்க அழைப்பையும் விடுக்கிறேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாண மக்களின் ஆணையைப் பெற்ற முதலமைச்சர் என்ற தோரணைக்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் 15 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் போராடியவன் என்ற ரீதியிலும் எம்மக்களின் அழிவுகளை இழப்புகளை இடப்பெயர்வுகளை நேரடியாக கண்ணுற்று அனுபவித்தவன் என்ற வகையிலும் இவை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எம்மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதிலும் மிக உறுதியாக செயற்படும் குடிமகன் என்ற வகையிலும் இம் மடலை தங்களுக்கு வரைகின்றேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை குறித்து பேச கொழும்பிலுள்ள தங்கள் வாசஸ்தலத்தை நாடி வந்தபோது “நான் கிழக்கு மாகாணத்தையோ அதன் முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை”என்று கிழக்குமக்களின் சுயாதீனத்தையும் இறைமையையும் தாங்கள் நிராகரித்தபோதும் கூட தங்களுக்கு எம்மக்களின் சார்பாக இம்மடல் வரையக் காரணம் ஒட்டுமொத்த தமிழினத்தின் சுபீட்சமான நிம்மதியான நிகழ்கால எதிர்கால நலன்களை தவிர குறுகிய அரசியல் நோக்கங்கள் அல்ல என்பதை தாங்கள் முதற்கண் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
அரசாங்கத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த 18 மாதங்களாக 15 சுற்றுகளாக நடத்திவரும் பேச்சுவார்த்தையில் பேசப்படும் விடயங்கள் தமிழ் மக்களின் சார்பாக கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படும் அதிகாரப் பகிர்வுக்கான யோசனைகள் இதுவரை கூட்டமைப்பினரால் தமக்கு வாக்களித்த மக்களுக்கோ நாட்டுக்கோ பகிரங்கப் படுத்தப்படவில்லை.
பேச்சுவார்த்தைக்காக அரசாங்கம் அழைப்பதும் சில சுற்றுக்கள் கூடிக் கதைத்ததும் திருப்தியில்லை எனக்கூறி கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக அறிவிப்பதும் பின் மீண்டும் அரசாங்கத்துடன் பேசுவதும் என இவ்விரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்த்தையானது தொடர்கதைபோல் நீள, இப்பேச்சுவார்த்தையின் உண்மையான நிலையும் அதில் மறைந்துள்ள மர்மங்களும் தந்திரங்களும் தங்களுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாத்திரமே தெரியும் நம்புகிறேன்.
ஆனாலும் அண்மைக்காலமாக ஊடகங்களினாலும் அரசாங்கத்தினாலும் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் மாகாண சபைகளுக்கான காணி காவற்துறை அதிகாரங்கள் மற்றும் வட கிழக்கு இணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஊகிக்க முடிகிறது.
எமது இவ்யூகம் உண்மையாக இருக்குமானால் வட கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி காவற்துறை அதிகாரங்களை முழுமையாக வழங்குவது தொடர்பில் நானும் எனது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம். வட கிழக்கு இணைப்பின் சாத்தியப்பாடு குறித்தும் அதில் கிழக்கு மாகாண மக்களின் அபிலாஷைகள் பற்றியும் தங்களுடன் விரிவாக கலந்துரையாட நாம் தயாராக உள்ளோம்.
மாகாணங்களுக்கான காணி காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் பேசுவதற்கு கூட்டமைப்பினர் புலிகளின் ஆயுதப்போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னரே முன்வந்துள்ளனர் என்பதுடன் நாம் அதற்கு முன்பிருந்தே மாகாணசபையினை பொறுப்பேற்றதிலிருந்து குரல்கொடுத்தும் அதனை பெறுவதற்கும் நாம் முயன்று வருகின்றோம்.
எவ்வாறிருப்பினும் மாகாணசபை முறைமை தொடர்பிலும் மாகாணசபை கட்டமைப்பின் 13ஆவது அரசியல் அதிகாரப் பங்கு தொடர்பிலும் நாம் கடந்த 3வருடங்களுக்கு மேலாக நேரடியாக தொடர்புபட்டிருக்கிறோம்.
எனவே, தாங்கள் அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்காக மாகாணசபை முறையையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் வலியுறுத்துவீர்களாயின் அது தொடர்பில் கூட்டமைப்புடன் திறந்த மனதுடன் எம் மக்களின் நலனுக்காக பேசுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்பதுடன் பேச்சுவார்த்தைக்கான பகிரங்க அழைப்பையும் விடுக்கிறேன்.
இனிமேலும் அடையமுடியாத இலட்சியங்களுக்காகவும் கோஷங்களுக்காகவும் எம்மக்களை பலிகொடுக்காமல் யதார்த்தபூர்வமாக அரசியல் தீர்வுக்காக நாம் கரம் கோர்த்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டாயமும் வரலாற்று கடமையுமாகும் என்பதை மிக மூத்த அரசியல்வாதியும்  அனுபவசாலியுமான தங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை.
எனவே மேற்குறித்த விடயங்கள் குறித்து பேசுவதற்கு இக்கடிதம் கிடைக்கப்பெற்று 15 நாட்களுக்குள் தங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten